Sunday 15 June 2014

யார் இந்த பி.ஜெ?

அன்புடையர் ; அஸ்ஸலாமு அலைக்கும்! அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! 

அவர் அப்படி என்னதான் சொன்னாரு? இதை தயவு செய்து படியுங்கள் உங்களுக்கும் புரியும்!!!


யார் இந்த பி.ஜெ?

பி.ஜெ என்ற அடைமொழி மூலம் அறியப்பட்டுள்ள பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் தமிழ் பேசும் முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத பல சகோதரர்களுக்கு மத்தியில் ஒரு பேச்சாளராக மட்டுமல்லாமல், எழுத்தாளராகவும், சிறந்த சமூக சேவகராகவும் அறியப்பட்டிருக்கிறார்.



இந்தியாவின் தமிழ்நாட்டில், தொண்டி என்ற ஊரில் பிறந்த இவர், இஸ்லாமிய மார்க்த்தைத் தெளிவாக கற்று ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுகி அதன் மூலம் பிரச்சாரக் களத்தில் தனக்கென ஒரு தனியிடத்தை மக்கள் மத்தியில் பெற்றுக் கொண்டுள்ளார்.

1980 காலப் பகுதியில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்கள் மன்றத்தில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் புறப்பட்ட இவருடைய பிரச்சார வாழ்க்கையில் இதுவரைக்கும் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக ஆயிரக் கணக்கான உரைகள் நிகழ்த்தியுள்ளார்
.
நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர், திருமறைக் குர்ஆனை எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் விதத்தில் மொழி பெயர்த்தது மட்டுமன்றி அதற்கு அழகிய முறையில் விளக்கவுரையும் எழுதியுள்ளார்

.மார்க்கப் பிரச்சாரம் மாத்திரம் தான் தங்கள் வேலை என்றெண்ணிக் கொண்டிருக்கும் பல மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் சமுதாயத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் ஆலிம்கள் குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் முன்னெடுப்புக்களிலும் தன்னை இவர் ஈடுபடுத்திக் கொண்டார்.

ஆலிம்கள் என்றால் இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதுவதும், நபியின் பிறந்த நாள் (?) விழா என்ற பெயரில் மவ்லிது என்ற அரபிப் பாடலை ஒதுவதும், ஐந்து நேரம் தொழுகை நடத்துவதும் தான் என்பதைத் தாண்டி, சமுதாயப் போராட்டத்தில் ஆலிம்கள் தங்களை ஈடுபடுத்தி நமது சமுதாயத்தின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று குரல் எழுப்புபவராக இவர் இருந்து வருகின்றார்.

ஏகத்துவப் பிரச்சாரத்தில் பி.ஜெயின் பங்களிப்பு


அல்லாஹ்வை வணங்க வேண்டிய சமுதாயம், அவ்லியாக்கள்(?) என்று மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டவர்களை வணங்கி வழிபட்டு வந்ததைப் பார்த்து அதற்கெதிராக இஸ்லாத்தின் உண்மை நிலையை மக்கள் மத்தியல் எடுத்துரைக்க வேண்டும் என்று ஏகத்துவப் பிரச்சாரத்தை 1980களில் தமிழகத்தில் இவர் ஆரம்பித்தார்.

கப்ரு வணக்கத்திற்கெதிராக குரல் கொடுத்த காரணத்தினால் பல இடங்களில் தாக்கப்பட்டு, அல்லாஹ்வின் உதவியினால் உயிர் பிழைத்தார்.

உயிரே போனாலும் கொள்கையை சொல்லாமல் விட மாட்டேன் என்ற கொள்கை உறுதியினால் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் இவருடைய பிரச்சாரம் சூடு பிடித்தது.

தமிழகத்தின் பல இளைஞர்கள் இவருக்குப் பின்னால் அணி வகுத்தார்கள்.


நவீன தாக்கத்தை உண்டாக்கிய “நஜாத்” பத்திரிக்கை.


ஏகத்துவப் பிரச்சாரத்தை எழுத்து மூலமும் எத்தி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துபையில் பணியாற்றும் தமிழ் கூறும் சகோதரர்களினால் நட்த்தப்பட்ட ஐ ஏ சி (இஸ்லாமிய விழிப்புணர்வு மையம்) என்ற அமைப்பின் சார்பில் “நஜாத்” என்ற பெயரில் ஒரு பத்திரிக்கை இவரை ஆசிரியராகக் கொண்டு துவங்கப்பட்ட்து. அது வரை காலமும் பேச்சாளராக மாத்திரமே அறியப்பட்ட பி.ஜெ நஜாத் பத்திரிக்கை மூலம் எழுத்தாளராகவும் அறிமுகமானார்.

ஆம் ஒவ்வொரு செய்தியையும் மிக அழகிய முறையில் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் விதமாக பேசும் இவர் எழுத்திலும் அதே முறையைக் கையாண்டார்.

கப்ரு வணக்கத்திற்கு எதிரான இவருடைய எழுத்துக்கள் “நஜாத்” பத்திரிக்கை மூலமாக தமிழகத்தின் மூலை முடுக்குகளையும் தாண்டி வெளிநாடுகளிலும் தடம் பதிக்க ஆரம்பித்தது.

மத்திய கிழக்கில் வேலை வாய்ப்புக்காக சென்றிருந்த மக்கள் மத்தியில் பி.ஜெ அவர்களின் பேச்சுக்களும் எழுத்துக்களும் அபார தாக்கத்தையே உண்டாக்கியது எனலாம்.

சினிமாவில் மூழ்கி, மரணித்தவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டிருந்த முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் இவருடைய பேச்சின் மூலமும், எழுத்தின் மூலம் இஸ்லாமிய சட்டங்களைப் பின்பற்ற முனைந்தனர்.

இன்றைக்கு இவரையும் இவர் சார்ந்திருக்கும் ஜமாத்தையும் எதிர்க்கும் பலரும் அன்றைக்கு இவருடைய கருத்துக்களின் தாக்கத்தினால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றால் அது மிகையல்ல. (இவருடன் இருந்த பலர் இவரை விட்டும் விலகிச் சென்றதற்கான காரணத்தை இறுதியில் விளக்குவோம்).

நடிகர்களுக்கு பால்அபிஷேகம் நடத்திய முஸ்லிம் இளைஞர்கள் “நஜாத்” பத்திரிக்கையின் வாசகர்களாக மாறினார்கள். ஏகத்துவக் கருத்துக்களை மற்றவர்களுக்கு பரப்புவது மட்டுமன்றி குர்ஆனை ஆழமாக படிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் இந்தப் பத்திரிக்கை உண்டாக்கியது.

இன்றைக்கும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தவ்ஹீத் வாதிகளை “நஜாத் காரர்கள்” என்று அழைக்கும் வழக்கம் இருந்து வருகின்றது. காரணம் நஜாத் பத்திரிக்கை தான்.

ஆனால் ஐ ஏ சி அமைப்பின் மூலமும், அதன் பொருளாதாரத்தின் மூலமும் உருவாக்கப்பட்ட நஜாத் பத்திர்கையை உள்ளூரில் நிர்வாகம் செய்து வந்த அபூஅப்துல்லா என்பவர் தன்னுடைய சொந்த உரிமையாக பதிவு செய்து கொண்ட்தால் ஐ ஏ சிக்கு ஆதரவாக, நியாயத்துக்கு ஆதரவாக நஜாத் பத்திரிகையில் இருந்து விலகினார். அத்துடன் நஜாத் பத்திரிகை இருந்த இடம் தெரியாமல் போனது தனி விஷயம்.


புரட்சியை உண்டாக்கிய புரட்சி மின்னல்


இதன் பின்னர் மதுரையில் இருந்து நீண்ட காலமாக அப்துல்லா என்பவர் புரட்சி மின்னல் என்ற பெயரில் ஒரு பத்திரிகையை நடத்தி வந்தார் அவர் ஐ ஏ சி யைத் தொடர்பு கொண்டு இந்தப் பத்திரிகையை நீங்கள் நட்த்துங்கள் என்று கூறி ஒப்படைத்தார். அந்தப் பத்திரிகையில் பீஜே தொடர்ந்து எழுதி வந்தார்.


அறிவுக் கண்களைத் திறந்த அல்ஜன்னத்


இவருடைய எழுத்துத் துறையின் இன்னொரு பரிணாமமாக உருவானதுதான் “அல்ஜன்னத்”பத்திரிக்கை. ஆன்மீகம் மட்டுமல்லாமல் அரசியில் கருத்துக்களையும் இதன் மூலம் பி.ஜெ முன்வைத்தார்.

பொது சிவில் சட்டம், இந்திய அரசியில் சாசனம் தொடர்பான விளக்கங்கள், குறைகள், பாதிக்கப்படும் சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்கள் தங்கள் உரிமையை வென்றெடுப்பதற்காக சட்ட ரீதியிலான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை இதன் மூலம் இவர் தெளிவுபடுத்தினார்.

ஷாஃபி, ஹனபி என்று ஆளுக்கு ஒரு இமாமை பிடித்துக் கொண்டு மத்ஹபுகள் என்ற வழி கெட்ட சிந்தனையில் இருந்தவர்களிடம் மத்தபுகளின் ஆபாசங்களையும், அசிங்கங்களையும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தியது மாத்திரமன்றி, ஹதீஸ்கள் என்ற பெயரில் போலியாக மக்களிடம் புகுத்தப்பட்டிருந்த செய்திகளையும் தெளிவுபடுத்திக் காட்டுவதற்குறிய சிறந்த ஊடகமாக அல்ஜன்னத்தை இவர் பயன்படுத்தினார்.
இயக்க ரீதியிலான கொள்கை முன்னெடுப்புக்கள்
ஆரம்பம் முதல் பல இயக்கங்களில் இணைந்திருந்த இவர் குர்ஆனையும், ஸஹீஹான ஹதீஸ்களையும் மாத்திரம் யாருக்கும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் உடைத்து சொல்ல வேண்டும் என்பதற்காக ஜாக் என்ற ஒரு இயக்கத்தை உருவாக்கினார். அதன் தலைவராகவும் இருந்தார். பிரசாரப்பணியில் தீவிரமாக ஈடுபட தலமைப் பொறுப்பு தடையாக இருப்பதாக கூறி அந்த இயக்கத்தினர் விரும்பாத போதும் வலுக்கட்டாயமாக கமாலுத்தீன் மதனியை அதன் தலைவராக ஆக்கினார்.
சிறிது காலம் அதில் இருந்து பிரச்சாரத்தை முன்னெடுத்த இவர் மார்க்க ரீதியிலான சில பிரச்சினைகள் காரணமாகவும், அரசியல் ரீதியிலும் முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், தமுமுக என்ற இயக்கத்தைச் சில சகோதரர்களுடன் சேர்த்து உருவாக்கினார்.

நேரடி அரசியலில் இணைந்து வெறும் வாக்கு வங்கி அரசியல் நடத்தும் இயக்கமாக இல்லாமல் சமுதாயத்தின் நலன் காக்கும் இயக்கமாக தமுமுக இருக்க வேண்டும் என்பதற்காக எக்காரணம் கொண்டும் தேர்தலில் இறங்க மாட்டோம் என்ற ஒரு விதியையும் அமைப்பு விதியாக்கினார்.

ஏகத்துவ அறிஞர்களின் இடைவிடாத உழைப்பாலும் தீவிரமான பிரச்சாரத்தினாலும் இந்த இயக்கம் மக்களிடம் செல்வாக்கு பெற்றது.

பலதடைகளைத் தாண்டி இந்த இயக்கம் பெருவளர்ச்சி கண்ட பின்னர் இதன் அமைப்பாள பொறுப்பில் இருந்து விலகினார். திருக்குர் ஆன் தமிழாக்கம் செய்யும் பணியில் முழுமையாக ஈடுபடுபட வேண்டியுள்ளதால் விலகுவதாகவும் அறிவித்தார். அன்றைய தமுமுகவில் தலைவர் பொதுச் செயலாளர் பதவிகலை விட மேலான முதனமையான பதவி அமைப்பாளர் பதவியாகும்.

அதன் பின்னர் அந்த இயக்கத்தின் பணிகளில் இருந்து விலகிக் கொண்டாலும் அதன் உறுப்பினராகவும், ஆலோசகராகவும் பல ஆண்டுகள் இருந்தார். பொதுவாக ஒரு இயக்கத்தில் இருந்து விளகுவோர் அதற்கு எதிராக செயல்படுவது தான் வழக்கம். ஆனால் இவர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டாலும் அந்த இயக்கதில் இருந்து வந்தார்.

இதன் பின்னர் அவர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எஞ்சிய தவ்ஹீத்வாதிகளை வெளியேற்றினால் தான் சுன்னத் ஜமாஅத் ஆதரவும் கிடைக்கும். நாம் தேர்தலிலும் போட்டியிடலாம் என்று கருதி யாரும் தவ்ஹீத் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று முடிவு செய்தனர். இதைக் கண்ட பிறகு தான் தவ்ஹித் பிரச்சாரம் உங்களுக்குத் தடையாக இருக்குமானால்அதை எழுதி தாருங்கள் நாங்கள் விலகிக் கொள்கிறோம் என்று கூறினார். 
அந்த மதிகெட்டவர்கள் அப்படியே எழுதியும் கொடுத்தனர்.

தமுமுக வில் இருந்து இவருடன் சேர்த்து வெளியாகிய அனைத்து மார்க்க அறிஞர்களும் சேர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை தோற்றுவித்தார்கள். தவ்ஹீத் பிரச்சாரம் தான் நமது உயிர் மூச்சு என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பு சமுதாய சேவையிலும் தனக்கென தனியிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 

தவ்ஹீத் பேசினால் மக்கள் வரமாட்டார்கள் என்ற இவர்களின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் கும்பகோனம் நகரில் பத்து லட்சம் முஸ்லிம்களைத் திரட்டி முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு போராட்டம் நடத்தினார்.
தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் நடத்திய இந்த பேரணி இதற்கு முன் தமுமுக நடத்திய எல்லா போராட்டங்களை விடவும் பிரம்மாண்டமாக இருந்தது. அதன் பின்னர் தஞ்சை, சென்னை தீவுத்திடல் என நடத்தப்பட்ட இரண்டு மாநாடுகளும் கும்பகோனத்தையும் மிஞ்சும் வகையில் இருந்தன. ஆனால் தவ்ஹீத் பிரச்சாரம் தான் தமுமுக வளர்ச்சிக்கு தடை என்று கூறியவர்கள் பீஜே பிரிந்த பின்னர் ஒரு மாநில மாநாடையும் நடத்த வில்லை. நடத்தினால் இரண்டையும் மக்கள் ஒப்பிட்டு பார்த்து தமுமுகவின் செல்வாக்கை விளங்கிக் கொள்வார்கள் என்று அஞ்சினார்கள்.

மாற்று மத அன்பர்களில் பலம் பெரும் இயக்கங்கள் எல்லாம் தமிழகத்தில் இருக்கும் போது, இரத்ததான சேவையில் மாநிலத்திலேயே முதல் இடத்தில் இவ்வமைப்பு தான் இருக்கிறது என்றால் அதன் சமுதாய சேவை முன்னெடுப்புக்களின் வீரியத்தை அறிந்து கொள்ளுங்கள்.

 
பி.ஜெ சந்தித்த விவாதக் களங்கள்
ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக விவாதக் களங்களையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கப்ரு வணங்கிகள், கிருத்தவர்கள், காதியானிகள், கடவுள் இல்லை என்று வாதிடும் நாத்தீகர்கள், குர்ஆன் சுன்னா என்று தங்களையும் தவ்ஹீத் வாதிகளாக வாதிடுபவர்கள் என்று பலருடன் பல விவாதக் களங்களை சகோதரர் பி.ஜெ சந்தித்தார்.

முதன் முதலில் குமரி மாவட்டம் கோட்டாரில் கப்ரு வணங்கிகளுடன் விவாதம் நடந்தது. அதில் கேரளாவின் பெரிய ஆலிமாக கருதப்படும் அபூபக்கர் முஸ்லியார் உள்ளிட்ட பல பெருந்த்தலைக்கள் கேவலமான தோல்வியைத் தழுவினார்கள். அதன் பின்னர் குமரி மாவட்ட்த்தில் மாபெரும் ஏகத்துவ எழுச்சி ஏற்பட்ட்து. தமிழகம் முழுவதும் கப்ரு வணக்கத்தில் இருந்து மக்கள் விடுபட இந்த விவாதம் காரணமாக் இருந்த்து எனலாம்.

நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் இவ்வுலகுக்கு அனுப்பப்பட மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாக இருக்க மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவனும் நபி தான் என்ற வழி கெட்ட கொள்கை கொண்ட காதியானிக் காபிர்களுடன் எதிர்த்து வாதிடுவதற்கு அனைவரும் பின்வாங்கிய நேரத்தில் இறைவனின் அருளினால் அவர்களுடன் பகிரங்க விவாதம் நடத்தி காதியானிகளின் குருட்டுக் கொள்கைக்கு சாவு மணி அடிக்க உதவினார்.

கஃபா நிலைக்குமா? என்ற தலைப்பில் இஸ்லாத்திற்கு எதிராக கருத்து வெளியிட்ட ஜெபமணி என்ற பாதிரியாருடன் மதுரையில் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் கிருத்தவம் தூய்மைத் தன்மையை இழந்து மனிதர்களின் சொந்தச் சரக்குகள் பைபிலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நிரூபித்து ஒரு விவாதத்தை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து இலங்கையில் கல்முனையில் மத்ஹப் வாதிகளுடன் நடந்த விவாதத்திலும் பங்கு கொண்டார்.

பின்னர் கொழும்பில் கப்ரு வணங்கிகளுடன் கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த மற்றொரு விவாதத்திலும் கலந்து கொண்டார்.

அதே போல் மவ்லிதுகளுக்கும், மதுகபுகளுக்கும் எதிராக கலியக்காவிளை என்ற இடத்தில் ததஜ சார்பாக மிகச் சிறப்பான ஒரு விவாதக் களத்தில் கலந்து கொண்டு சத்தியக் கொள்கையை நிலை நாட்ட பாடுபட்டார்.

ஒருவன் முஸ்லிம் என்று தன்னை சொல்லிக் கொண்டால் அவன் என்னிடம் வந்து பைஅத் – உறுதி மொழி தரவேண்டும் என்று வாதிட்டு பைஅத் செய்யாதவர்கள் அனைவரும் காபிர்கள் என்று குப்ர் பட்டம் சூட்டிய இலங்கை உமர் அலி என்பவருடன் இலங்கை புத்தளம் நகர மண்டபத்தில் பகிரங்க விவாதம் ஒன்றை நடத்தியதின் மூலம் உமர் அலியின் உளரல் மொழிகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவினார்.

அல்லாஹ் உருவமற்றவனா? அபத்தங்களும், ஆபாசங்களும். இமாம்களின் துணையின்றி குர்ஆனையும், சுன்னாவையும் விளங்க முடியாதா?, போன்ற தலைப்புகளில் கப்ரு வணக்கத்திற்கு வக்காலத்து வாங்கி மக்களை வழிகேட்டிற்கு அழைத்துக் கொண்டிருக்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்பவருடன் சென்னையில் தொடர்ந்து நான்கு விவாதங்களை நடத்தினார்.

கடவுள் இல்லை எல்லாம் இயற்கை என்று வெற்றுக் கூச்சல் போடும் நாத்தீக திராவிட இயக்கத்தவர்களுடன் இறைவன் இருக்கிறான் என்பதை அழுத்தமாக பதிய வைக்க கடந்த ஆண்டு பகிரங்க விவாதக் களத்தில் அவர்களுடன் வாதிட்டார்.

இறுதியாக முஸ்லீம்களில் யாரும் என்னுடன் வாதிக்க வர மறுக்கிறார்கள். நான் சொல்லும் கிருத்தவ மதம் தான் உலகில் உண்மை மதம், என்று வெறிக் கூச்சல் போட்டுத் திரிந்த ஜெர்ரீ தோமஸ் என்ற கிருத்தவ பாதிரியாருடன் ததஜ சார்பாக கடந்த ஜனவரி மாதம் சென்னையில் பைபில் இறை வேதமா? என்ற தலைப்பில் ஒரு பகிரங்க விவாதத்தை நடத்தினார்.

இதன் விளைவாக இரண்டாவது தலைப்பான குர்ஆன் இறை வேதமா? என்ற தலைப்புக்கு வாதிக்க வராமலே ஓடினர் ஜெர்ரீ தோமஸ்.
இப்படி தனது 30 வருட கால பிரச்சாரக் களத்தில் பல விவாதக் களங்களையும் சந்தித்தார் சகோதரர் பி.ஜெ



இணைய தளத்திலும் இஸ்லாமியப் பிரச்சாரம்

நவீன ஊடகங்களையும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காக  www.onlinepj.com என்ற பெயரில் ஒரு இணையதளத்தை ஆரம்பித்து தூய பிரச்சாரத்தை செய்து வருகின்றார்.
தான் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் இலவசமாக வாசகர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இணையதளத்தில் வெளியிட்டார்.


தனது திருக்குர்ஆன் மொழியாக்கம் மற்றும் விளக்கவுரை, ஆயிரக்கணக்கான வீடியோ, ஆடியோ உரைகள், கட்டுரைகள், கேள்வி பதில் தொகுப்புக்கள், சர்சைக்குரிய சட்டங்களுக்கு ஆய்வு ரீதியிலான பதில்கள், குடும்பவியல் தொடர்பான தெளிவான விளக்கங்கள் என இணையதளம் மூலமான தனது பிரச்சாரத்தையும் செவ்வெனே செய்து வருகின்றார்.

இப்படி பலவிதமாக பிரச்சாரங்கள் இவர் செய்து வந்தாலும் இவருடன் பிரச்சாரக் களத்தில் ஆரம்ப காலத்தில் இணைந்திருந்த சிலர் ததஜ வில் இருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்ட பின்னர் இவரைப் பற்றி பலவிதமான விமர்சனங்களையும் இவர்கள் செய்து வருகின்றார்கள்.

காரணம் அவர்கள் அனைவரும் தாமாக அமைப்பை விட்டு போனவர்கள் அல்ல குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்கள். தங்கள் சுயலாபத்திற்காக இயக்கத்தைப் பயன்படுத்தியவர்கள் இயக்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டவுடன் தாங்கள் தூய்மையானவர்கள் என்பதை நிரூபிக்க முடியாத காரணத்தினால் இவர் மீது அபாண்டமாக செய்திகளைப் பரப்பி வருகிறார்கள் என்பதே நிதர்சனம்.
பி.ஜெ யைப் பின்பற்றலாமா?
ஏகத்துவப் பிரச்சாரத்திற்காக பல தியாகங்களை செய்து தனது வாழ்நாளில் பெரும் பகுதியை இதற்காகவே இவர் அர்பணித்தார் என்பதில் நமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஆனால் இவருடைய கருத்துக்களை கண்மூடிப் பின்பற்றுவதற்கு தக்லீத் – தனிமனித வழிபாடு நடத்துவதற்கு மார்க்கத்தில் எவ்வித அனுமதியும் கிடையாது.

பி.ஜெ சொன்னால் அனைத்தும் சரியாகத் தான் இருக்கும்.

அவர் தவறாக சொல்ல மாட்டார்.

அவரில்லாவிட்டால் தவ்ஹீத் பிரச்சாரம் கேள்விக் குறியாகிவிடும்.

இவருடைய ஆய்வுகள், கருத்துக்களில் தவரே இல்லை

என்று யாராவது வாதிட்டால் அவர் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த வரையில் அல்லாஹ்வை இறைவனாக ஒத்துக் கொண்ட ஒவ்வொரு மனிதனும் அவனுடைய இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும்.

எந்த ஒரு மார்க்க விஷயமாக இருந்தாலும் அல்லாஹ் சொல்லியுள்ளானா? நபியவர்கள் காட்டித் தந்தார்களா? என்று தான் பார்க்க வேண்டுமே தவிர பி.ஜெ சொல்லிவிட்டார் என்று பின்பற்றுவதற்கு எவ்வித அனுமதியும் இல்லை. பி.ஜெ ஒரு செய்தியைச் சொன்னாலும் அதை அல்லாஹ் சொன்னானா? நபியவர்கள் சொன்னார்களா? என்று ஆய்வு செய்துதான் பின்பற்ற வேண்டும்.

ஏன் என்றால் அவரும் சாதாரண மனிதர் தான் தன்னுடைய ஆய்வின் படி சரியானதாக தான் நினைக்கும் கருத்தை அவர் வெளியிடுகின்றார். குறிப்பிட்ட கருத்து தவறானது என்று யாராவது ஆதாரத்துடன் சுட்டிக் காட்டும் போது அதனை அவர் மாற்றிக் கொள்கின்றார். இதுவே இவரின் கருத்தில் சரியும் இருக்கும் தவறும் வரும் என்பதற்கான ஆதாரமாகும்.

பி.ஜெ அவர்கள் ஆரம்ப காலத்தில் தான் வெளியிட்ட பல கருத்துக்களை அவை தவறானவை என்று சுட்டிக் காட்டப்பட்டவுடன் திருத்தியிருக்கிறார்.

பி.ஜெ ஆரம்பத்தில் சொன்ன கருத்துக்களில் பின்னர் மாற்றிக் கொண்ட சில கருத்துக்கள்….

உதாரணத்திற்கு பி.ஜெ ஆரம்ப காலத்தில் பிரச்சாரம் செய்தவற்றில் தற்போது மாற்றிக் கொண்ட சிலவற்றை இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.

ஏகத்துவக் கொள்கையை யாருக்கும் வளைந்து கொடுக்காமல் உடைத்துச் சொன்னார் அந்த அடிப்படைக் கொள்கையில் அவரிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆயினும் ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் தவறுகள் ஏற்பட்டு அதை சுட்டிக் காட்டும் போது அவ்வப்போது பகிரங்கமாகச் ஒத்துக் கொண்டு திருத்திக் கொண்டிருக்கிறார்.

இவரை விடப் பல மடங்கு அறிவும், ஆற்றலும் மிக்க எத்தனையோ அறிஞர்கள், ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் தவறாக முடிவு செய்து பின்னர் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த நிலை ஏற்படாத எந்த அறிஞரும் உலகத்தில் ஒரு காலத்திலும் இருந்ததில்லை.


இதற்கான காரணம்..


அறிவிப்பாளர் குறித்த விமர்சனங்கள் அடங்கிய அனைத்து நூல்களும் கிடைக்கப் பெறாமை.

பொதுவாக மனிதரிடம் காணப்படும் மறதி, கவனமின்மை.

ஒருவரைப் பற்றி செய்த விமர்சனத்தை அதே பெயருடைய மற்றவருக்குப் பொருத்தி விடுதல்.

இந்தத் துறையில் விற்பன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் செய்த விமர்சனங்களில் பெரும்பாலும் தவறு ஏற்படாது என்று எண்ணி அப்படியே அவர்களின் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளுதல்.

இது போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன.

தவ்ஹீத் ஜமாஅத் மூத்த அறிஞர்களைப் பொறுத்த வரை அவர்கள் அனைவருமே மத்ஹபை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கூடங்களில் தான் கற்றனர். அவர்கள் கற்ற கல்விக் கூடங்களில் ஹதீஸ் கலை குறித்து முறையாகக் கற்பிக்கப்படாததால் அந்தக் கலையைக் கூட சுய முயற்சியால் கற்கும் நிலையில் இருந்தனர்.

இதன் காரணமாகத் தான் துவக்க காலங்களில் சில ஹதீஸ்கள் குறித்து நிலை மாற்றம் ஏற்பட்டது. தற்போது ஹதீஸ் கலை தொடர்பான அனைத்து நூல்களும் திரட்டப்பட்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் தாம் பேசிய, எழுதிய, அங்கீகரித்த ஹதீஸ்களில் பலவீனமானவை உள்ளனவா? என்பதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் ஏற்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த காலங்களில் ஒரு ஹதீஸை ஸஹீஹ் என்று கருதியதால் அதன் அடிப்படையில் சில சட்டங்களைக் கூறினார்கள். பின்னர் அவை பலவீனம் எனத் தெரிய வரும் போது முன்பு பலவீனமான ஹதீஸின் அடிப்படையில் கூறிய சட்டத்தை தவறு என்று தெளிவுபடுத்தினார்கள்.

பெரும்பாலான மக்கள் அதனை அறிந்திருந்தாலும் இன்னும் அதிகமானவர்கள் தவ்ஹீத் ஜமாத் உலமாக்கள் முன்னர் சரி என்று கூறி, பின்னர் தவறு என்று மாற்றியவற்றை அறியாமல் இருக்கின்றனர். எனவே அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கத்தில் அவற்றை பத்திரிக்கைகளிலும் சிடி க்களாகவும் பிரச்சாரம் செய்கிறார்கள்.

ஏற்கனவே ஒரு கருத்தைச் சொல்லிவிட்டால் அது தவறு என்று தெரிந்த பின்னர் அதில் பிடிவாதமாக இருப்பதும் பொருந்தாத காரணம் கூறி உண்மையை மறைப்பதும் இறையச்சத்திற்கு எதிரானதாகும்.

மறுமையைப் பற்றிய அச்சம் இல்லாமல் குரோதப் புத்தி கொண்ட சில குறுமதியாளர்கள் இளக்காரம் செய்வார்கள் என்றாலும் தம் கவுரவத்தை விட மார்க்கம் முக்கியமானது என்ற அடிப்படையில் இதைத் தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.


பெண்கள் கப்ர் ஸியாரத் செய்யலாமா?


பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வது கூடாது என்பது தான் முதலில் பி.ஜெ மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாக இருந்தது. அதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக எடுத்து வைக்கப்பட்டது.

கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களையும் அதை வணங்குமிடமாகவும் விளக்கு ஏற்றுமிடமாகவும் ஆக்கும் பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: திர்மிதீ (294), நஸயீ (2016), அபூதாவூத் (2817), அஹ்மத் (1926, 2472, 2829, 2952)

இச்செய்தியில் பாதாம் என்ற அபூஸாலிஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.

பின்வரும் ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் கப்ரு ஜியாரத் செல்வதற்குத் தடையில்லை என்பதே சரியானதாகும். மரண பயத்தையும் மறுமைச் சிந்தனையையும் வரவழைத்துக் கொள்வதற்காக பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்வதற்கு அனுமதியுள்ளது. மண்ணறைகளுக்குச் செல்பவர்கள் ஓத வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். 

நான் ”அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ”அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹூல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹூ பி(க்)கும் ல லாஹிகூன்” என்று சொல்” என்றார்கள்.

(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறை நம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்று விட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக் கூடியவர்களாக உள்ளோம். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் (1774)

நபியவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு கப்ரு ஜியாரத்தின் போது ஓத வேண்டிய துஆவைக் கற்றுக் கொடுத்ததின் மூலம் பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வதில் தவறில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

“அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (1777)

“அடக்கத்தலங்களை சந்திப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். முஹம்மதுவிற்கு அவரின் தாயாருடைய அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் மண்ணறைகளைச் சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையை நினைவூட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: திர்மிதி (974)

மண்ணறைகளை ஸியாரத் செய்கிறோம் என்று கூறிக் கொண்டு சில பெண்கள் தர்ஹாக்களுக்குச் செல்கிறார்கள். தர்ஹாக்களில் இணை வைப்பு அரங்கேற்றப்படுவதாலும் மார்க்கம் தடை செய்த ஏராளமான அம்சங்கள் அங்கு நடைபெறுவதாலும் அங்கு ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் செல்வது கூடாது. 

பொது மையவாடிகளுக்குச் செல்லலாம். என்பதே மறு ஆய்வின் தெளிவான முடிவாகும்.

இது போன்ற இன்னும் எத்தனயோ விடயங்களை அல்லாஹ்வை பயந்து மனோ இச்சைக்கு இடம் கொடுக்காமல் இறைவனுக்காகவும் இறை தூதருக்காகவும் வளைந்து கொடுக்காமல் நிலை நாட்டி உள்ளார்.

அல்ஹம்துலில்லாஹ்! இன்னும்  இவருடைய சேவைகள் தொடரவும், நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமாக, எல்லாவித அருள் வழங்களையும் பெற்று நீடூழிவாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்வோமாக!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.